Friday, January 13, 2012

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு!

புது தில்லி, ஜன. 12: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை (ஸ்வஸ்திய பீமா யோஜனா) மத்திய அரசு 2007 அக்டோபர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் 2008 ஏப்ரல் முதல் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்கள், ஆண்டுக்கு ரூ.30,000 மதிப்பில் காப்பீட்டின் மூலம் மருத்துவ வசதியைப் பெற முடியும். இதற்கான பிரீமியத் தொகையை மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் செலுத்துகின்றன. ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் 90 சதவீத பிரீமியத் தொகையை மத்திய அரசும், மீதியை மாநில அரசும் செலுத்தி வருகின்றன.

இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளிகள், பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு ஆண்டுக்கு ரூ.30 செலுத்தினால் போதும். 2011 டிசம்பர் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் 2.57 கோடி பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதுவரை 29.25 லட்சம் பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும்... இத்திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகள், தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், பீடி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் சில பிரிவுகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுவருவதை உலக வங்கி, சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை பாராட்டியுள்ளன என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கூறப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source
Download As PDF

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Comments